போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர் பலியானதாக கூறி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
கோவை: போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர் பலியானதாக கூறி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

கடந்த மாதம் 22-ம் தேதி மேட்டுப்பாளையம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு தப்ப முயன்றதாக சாகுல்ஹமீது, சையதுஇப்ராகிம் என்ற இருவரை அப்பகுதி மக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். முன்னதாக, பொதுமக்களிடம் இருந்து அந்த வாலிபர்கள் தப்ப முயன்றபோது இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்ததால் அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
அவர்களை கைது செய்த மேட்டுப்பாளையம் போலீசார், இருவருக்கும் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்த அப்பகுதியில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சாகுல்ஹமீது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தநிலையில், வாலிபர்கள் இருவரையும் போலீசாரிடம் ஒப்படைக்கும் போது லேசான காயம் மட்டுமே ஏற்பட்டிருந்ததாகவும், போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதால் தான் சாகுல்ஹமீது உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, வாலிபர் மரணத்திற்கு காரணமான மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், மரணம் தொடர்பாக முறையான நீதி விசாரணை வேண்டியும் இன்று காலை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.